ஷா ஆலம், மார்ச் 25– கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் மூலம் கடந்த மார்ச் 15ஆம் தேதி வரை 41,104 பேர் பயனடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 34,903ஆக இருந்ததாக மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் கித்தா சிலாங்கூர் திட்ட வாராந்திர மேம்பாட்டு அறிக்கை கூறியது.
மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 20 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீட்டின் வழி மேற்கொள்ளப்பட்ட 351 திட்டங்கள் வாயிலாக 35,345 பேர் பயனடைந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 355,277 வெள்ளி ஒதுக்கீட்டின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட 65 திட்டங்கள் மூலம் 5,759 பேர் பயன் பெற்றுள்ளனர்.
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வெள்ளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஐம்பதாயிரம் வெள்ளியும் வழங்கியது.
இது தவிர்த்து, நாடி எனப்படும் ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் திட்டத்திற்கு செய்யப்பட்ட 457,000 வெள்ளி மதிப்பிலான 123 விண்ணப்பங்களை ஹிஜ்ரா சிலாங்கூர் அங்கீகரித்துள்ளது. மேலும் 189 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.