ஷா ஆலம், மார்ச் 29- விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் 70 லட்சம் வெள்ளி மானியத்தை மாநில அரசிடமிருந்து பெற்றது.
வசதிகளை மேம்படுத்துவது, அடிமட்ட நிலையிலான திட்டங்களை மேற்கொள்வது, விளையாட்டு சாதனங்களை வாங்குவது, விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அலவன்ஸ் வழங்குவது ஆகிய நோக்கங்களுக்கு அந்த மானியம் பயன்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
இவை தவிர, அடுத்தக் கட்ட விளையாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்குவது, விளையாட்டு உபகரணங்கள், சத்துணவு, அடைவு நிலை ஆய்வு, தன்முனைப்பு பயிற்சி போன்ற நோக்கங்களுக்காகவும் அந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாநிலத்தில் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு ஆண்டுதோறும் 70 லட்சம் வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கடந்தாண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார்.
அந்த தொகை சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் வாயிலாக பயன்படுத்தப்படும் எனக் கூறிய அவர், ஒதுக்கப்படும் நிதியில் பாதி தொகை சுக்மா போட்டிக்கு விளையாட்டாளர்களைத் தயார் படுத்த பயன்படுத்தப்படும் என்றார்.