அம்பாங், ஏப் 2- கலைப்படைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நவீன கலைப் படைப்பு அருங்காட்சியகத்தை அமைக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசினால் வெளியிடப்பட்ட சில எழுத்துப்படிவங்களும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கலைப்படைப்புகளை நாங்கள் வரவேற்பதோடு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். சிலாங்கூர் மாநில அரசுகூட சில எழுத்துப் படிவங்களை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காக நவீன கலைப்படைப்பு அருங்காட்சியகம் எனும் பெயரில் மையம் ஒன்றை உருவாக்கவுள்ளோம் என்றார் அவர்.
இங்குள்ள பிளாமிங்கோ தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்ற அன்வாருடன் சந்திப்பு எனும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களை தயாரிக்கும் மற்றும் பயிற்சியளிக்கும் மையமாக சிலாங்கூர் மாநிலத்தை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் தாங்கள் விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உணவுக் கூடைகளாலும் ஒப்பற்ற கொள்கைகளாலும் முதலீடுகளாலும் மட்டும் இந்த உலகை செவ்வனே வடிவமைத்து விட முடியாது. மாறாக, நமது மக்கள், நமது நாடு, நமது ஆத்மா கலை கலாசார கூறுகளால் வடிவமைக்கப்படுவது அவசியமாகும். அதன் வாயிலாகவே முதிர்ச்சியும் நாகரீகமும் பொறுப்புணர்வும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.