ஷா ஆலம், ஏப் 6– வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக மகளிர் பல துறைகளில் திறன் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
பல துறைகளில் திறமைகளைக் கொண்டிருப்பதன் மூலம் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பினை அவர்கள் பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கல்வி ரீதியாகவும் தொழில்திறன் ரீதியாகவும் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவதை தாம் ஊக்குவிப்பதாக அவர் மேலும் சொன்னார்.
உதாரணத்திற்கு, சோப்பு தயாரிப்பது தொடர்பான அடிப்படை பயிற்சியைப் பெறும் பட்சத்தில் குடும்ப செலவினத்தைக் குறைக்கும் அதேவேளையில் உபரி வருமானத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் பெற முடியும் என்றார் அவர்.
மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சாவா செம்பாடான், சி புளோக்கில் நடைபெற்ற சோப்பு தயாரிக்கும் பட்டறையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தாக்கம் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு நாடி எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.