சிரம்பான், ஏப் 9- நாட்டில் மேற்கொள்ளப்படும் 2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பில் இன்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
நாட்டிலுள்ள 3 கோடியே 27 லட்சம் பேரை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய புள்ளிவிபரத்துத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு முழுமையாக முடிப்பது என்பதை விட புள்ளிவிபர முறையின் கீழ் மக்களிடமிருந்து எப்படி துல்லியமான தகவல்களைப் பெறுவது என்பதுதான் தங்களின் முக்கிய இலக்காக உள்ளது என்று அவர் சொன்னார்.
நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு ஏதுவாக சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தெளிவான தரவுகளை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் பாரு ராசாவில் 2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் வாயிலாக ஒவ்வொரு இடத்திலும் தேவைப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில் இன, மற்றும் அந்தஸ்து வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.