ஷா ஆலம், ஏப் 10- நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோரும் மகஜரை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மாட்சிமை தங்கிய பேரரசரிடம் சமர்ப்பிக்கும்.
நாடாளுமன்றம் கூட்டப்படுவதை ஆதரிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளதாக பக்கத்தான் கூட்டணியின் தலைவர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நாடாளுமன்றம் கூட்டப்படுவதை அவசரகாலம் தடுக்காது என்ற மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மகஜரை ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
ஊழலும் சுய நலப்போக்கும் கொண்டவர்கள் தவிர்த்து மக்கள் நலனை இலக்காக கொண்டு ரிமோர்மாசி இயக்கத்தின் கொள்கைகளையும் உயர்நெறிகளையும் அடிப்படையாக கொண்ட எந்த தரப்பினருடனும் இணைந்து செயல்படத் தாங்கள் தயாராக உள்ளதாக அந்த அறிக்கை வலியுறுத்திக் கூறியது.
கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு மற்றும் ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.