கோலாலம்பூர், ஏப் 11– சிலாங்கூரிலுள்ள இன்னாள் மற்றும் முன்னாள் விளையாட்டாளர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்காக மாநில அரசு 150,279 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
புரோட்டின், வைட்டமின் சார்ந்த உணவுகளையும் ஊட்டச்சத்து பானங்களையும் வழங்கும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 விளையாட்டாளர்கள் பயனடைந்துள்ளதாக இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள இன்னாள் மற்றும் முன்னாள் விளையாட்டாளர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
தற்போது விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடாத போதிலும் பயிற்சிகளை வழக்கம் போல் உற்சாத்துடன் மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சிகளும் மனோதிடத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
இங்குள்ள புக்கிட் கியாராவில் நடைபெற்ற தேசிய விளையாட்டாளர் நல வாரியத்தின் அலுவலகத்தில் விளையாட்டாளர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் சிலாங்கூரை பிரதிநிதித்து கலந்து கொண்டவர்கள் மற்றும் மாநிலத்தின் விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய பங்கினை ஆற்றியவர்கள் இந்த சத்துணவுத் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.