ஷா ஆலம், ஏப் 15– சிலாங்கூர் மற்றும் இங்கிலாந்து இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மலேசியாவுக்கான இங்கிலாந்து தூதர் எச்.இ.சார்ல்ஸ் ஹேய் ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.
இங்கிலாந்து தூதருடனான இந்த பேச்சுவார்தையில் இலக்கவியல் துறை, விவேக நகர்த் திட்டம், பருவநிலை மாற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் கார்பன் குறைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக அமிருடின் கூறினார்.
தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களுடன் நீண்ட கால ஒத்துழைப்பை சிலாங்கூர் கொண்டுள்ளதாக கூறிய அவர், இதரத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அது விரும்புவதாக அவர் சொன்னார்.
அடுத்தக் கட்டமாக பிரிட்டிஷ் மலேசிய வர்த்தக சபையின் வட்ட மேசை விவாதத்திற்காக காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இங்கிலாந்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.