PBTSELANGOR

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு- ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது

ஷா ஆலம், ஏப் 14- ஒன்பது வகை குற்றங்களுக்கு வழங்கப்பட்ட சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரை கழிவு வழங்க ஷா ஆலம் மாநகர் மன்றம் முன்வந்துள்ளது. இந்த சலுகை நோன்பு மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.

குற்றப்பதிவை கொண்டவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் இந்த சலுகை நேற்று தொடங்கி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

பொது மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும்  நடமாடும் அலுவலக சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குற்றப்பதிவுகளைக் கொண்டவர்கள் விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் உள்ள பிரதான முகப்பிடம் அல்லது சுங்கை பூலோ மற்றும் கோத்தா கெமுனிங்கில் உள்ள அலுவலகங்களில் அபராதத் தொகையைச் செலுத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கு 30 வெள்ளி வரை கட்டணக் கழிவு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வியாபாரத்தை கட்டுப்படுத்துவது, நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க உடனடியாக அபராதத் தொகையைச் செலுத்தி விடும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். 

இவ்விவகாரம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் மாநகர் மன்றத்தின் நிதிப் பிரிவை  03-55222882 அல்லது 03-55105133 இணைப்பு 1477, 1656, 1657 மற்றும் 1658 என்ற எண்களுடனும்  அல்லது eps.mbsa.gov.my. என்ற அகப்பக்கம்  வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

 


Pengarang :