ஷா ஆலம், ஏப் 16– நோன்பு தொடங்கியது முதல் தினசரி 10,000 டன் எடையுள்ள உண்பதற்கு ஏற்ற நிலையில் உள்ள உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வீசப்படுவதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் இந்நடவடிக்கையால் வடிகால்களில் நீரோட்டம் தடைபடுவதோடு கடுமையான துர்நாற்றமும் உண்டாகிறது என்று அவர் சொன்னார்.
நோன்பு தொடக்கத்தில் தீபகற்ப மலேசியாவில் பத்தாயிரம் டன் எடையுள்ள உண்பதற்கு ஏற்ற நிலையில் உள்ள உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வீசப்படுவதாக திடக்கழிவு மற்றும் பொது சுகாதார கழகம் மதிப்பிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ரமலான் மாதம் முடியும் வரை பொதுமக்கள் அதிக பொருள்களை வாங்குவர் என்பதால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிகுதியான உணவுப் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யப்பட்ட இடங்களில் வீசும்படி பொதுமக்கள், உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு தொழிற்சாலைகளை அவர் கேட்டுக் கொண்டார்.