ஷா ஆலம், ஏப் 21- புஞ்சா ஆலம் பிரதான மின் விநியோக மையத்தின் கேபிள் இணைப்புக் கம்பிகளில் ஏற்பட்ட தீ காரணமாக கிள்ளான் வட்டாரத்தின் எட்டு பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக பண்டார் புஞ்சா ஆலம், தாமான் ஆலம் சூத்ரா, தாமான் ஆலம் சூரியா, கம்போங் புக்கிட் ஹீஜாவ் ஆகிய பகுதிகள் மின் விநியோகத் தடையை எதிர்நோக்கியதாக தெனாகா நேஷனல் நிறுவனத்தின் கேர்லைன் அறிக்கை ஒன்றில் கூறியது.
இவை தவிர, கம்போங் புக்கிட் செராக்கா, பண்டார் ஹில்பார்க், அஸ்தானா ஆலம் 2 மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இந்த மின் தடையினால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
தெனாகா நேஷனல் நிறுவனத்தின் நுட்பக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு பழுதை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இத்தீவிபத்து தொடர்பான தகவலை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாலை 5.00 மணியளவில் பெற்றதாக பெரித்தா ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அத்துறையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.