கோலாலம்பூர், ஏப் 21– உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு 2020 பெரும் கொந்தளிப்பான ஆண்டாக விளங்கியது என்றால் அது மிகையில்லை. கடுமையான சீதோஷண நிலை மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று ஆகிய இரு பேரிடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உலக மக்களுக்கு ஏற்பட்டது.
பெரும்பாலான மக்கள் கருதுவது போல் நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்கம் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை பெரிதாக ஒன்றும் குறைத்து விடவில்லை என்று உலக வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட 2020ஆம் ஆண்டிற்கான சீதோஷணநிலை மீதான ஆய்வு கூறுகிறது.
லா நினா பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட குளிர் நிலையைத் தாண்டி அதிக வெப்ப நிலையைப் பதிவு செய்த மூன்று வருடங்களில் ஒன்றாக 2020 விளங்குகிறது. 1850 ஆம் ஆண்டு முதல் 1900 ஆம் ஆண்டு வரையிலான தொழிலியலுக்கு முந்தைய காலத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக அந்த ஆய்வு தெரிவித்தது.
ஒரு டிகிரி செல்சியஸ் என்பது அதிக வெப்பம் தேவைபடக்கூடிய ஒரு அளவாகும். பனிப்பாறைகள் உருகுவதற்கும் கடல் மட்டம் உயர்ந்து கோடிக்கணக்கான மக்கள் நீரில் மூழ்குவதற்கும் இந்த ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானதாகும்.
கடந்த 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகள் அதிகம் வெப்பம் மிகுந்த ஆண்டுகளாக பதிவாகின. இதனால் சமூக பொருளாதா மேம்பாடுகளில் பாதிப்பு, இடப்பெயர்வு, உணவு பாதிப்பு, நில மற்றும் கடல் சூழியலில் மாற்றம் என பல்வேறு பாதிப்புகள் உண்டாகின.
மனித நடவடிக்கைகள் காரணமாக 90 விழுக்காடு கூடுதல் வெப்பத்தை தன்னகத்தே ஈர்ததுக் கொள்ளும் நிலை கடலுக்கு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.