ஷா ஆலம், ஏப் 24– தடுப்பூசியை வாங்குவதற்கும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறநிதியை பயன்படுத்துவது பெரிக்கத்தான் அரசாங்கத்தின் ஆற்றலின்மையை புலப்படுத்துவதாக உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் கூறினார்.
அறநிதியைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதோடு கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் பெரிக்கத்தான் அரசாங்கம் தோல்வி கண்டதை உணர்த்தும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
நாட்டின் வரலாற்றில் மிக அதிகமாக அதாவது 30,000 கோடி வெள்ளிக்கும் கூடுதலான தொகையில் 2021ஆம் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போதிலும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்றார் அவர்.
கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு 300 கோடி வெள்ளி போதுமானது என அத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார். எனினும் அத்தொகை போதுதாது எனத் தோன்றுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
இவ்விவகாரத்தில் பிரச்னைக்குரியதாக உள்ளது நிதி ஒதுக்கீடு அல்ல. மாறாக, அரசாங்கத்திடம் காணப்படும் திறனற்றப் போக்குதான் என அவர் தெரிவித்தார்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நடப்பு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் 700 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என ஹாங் துவா ஜெயா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.