புது டில்லி, மே 6– இந்தியாவில் நேற்று புதிதாக 412,262 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதன் வழி கோவிட்-19 வரலாற்றில் அதிகப் பட்ச நேர்வுகளைப் பதிவு செய்த நாடாக இந்தியா விளங்குகிறது.
அந்நாட்டில் மொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக பதிவான வேளையில் மரண எண்ணிக்கை 3,980 அதிகரித்து 230,168 பேராக ஆகியுள்ளது.
கோவிட்-19 நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் நான்கு லட்சத்தை தாண்டியது இது இரண்டாவது முறையாகும். கடந்த சனிக்கிழமை 401.993 பேர் இந்நோய்க்கு ஆளாகினர்.
இந்நோய்த் தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாத ஒன்று என இந்தியாவின் பிரசித்தி பெற்ற அறிவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமையன்று எச்சரித்திருந்தார்.
இரண்டாவது நோய்த் தொற்று அலையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் எனக் கடுமையாக குறை கூறப்பட்ட பிரதமர் நநேரந்திர மோடி, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்யும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நோயின் சங்கிலித் தொடர்பை துண்டிப்பதற்கு ஏதுவாக நாடு முழுவதும் விரிவான அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவ நிபுணர் ஒருவர் கூறினார்.