கோலாலம்பூர், மே 7- அந்நிய நாட்டினருக்கு எதிராக சீரற்ற முறையில் திடீர் சோதனைகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்தும்படி அனைத்து போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி கூறினார்.
சில அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
எந்தவொரு வலுவான காரணமும் இன்றி அந்நிய நாட்டினருக்கு எதிராக விருப்பம் போல் சோதனை நடத்துவதை உடனடியாக நிறுத்தும்படி காவல் துறைக்கு நான் உத்தரவிடவுள்ளேன் என்றார் அவர்.
அந்நிய நாட்டினரிடம் கடப்பிதழ் உள்ளதா அல்லது அவர்கள் வசமுள்ள ஆவணங்களில் காணப்படும் குடிநுழைவுத் துறையின் முத்திரை அசலானதா என்பதை கண்டறிவதாகக் கூறி விருப்பம் போல் இரு வாரங்களுக்கு அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
போலீஸ் துறையில் அதிகாரத்துஷ்பிரயோகம் நடைபெறுவதற்கு காரணமாக விளங்கும் பல வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அக்ரில் சானி குறிப்பிட்டார்.