காஜாங், மே 10- காஜாங்கில் கடந்த புதன்கிழமை பெய்த அடைமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்கள் குறித்த விபரங்களை காஜாங் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திரட்டி வருகிறது.
இந்த வெள்ளத்தில் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுவதாகவும் அவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொகுதி உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்குவதற்கு மாநில அரசிடம் பரிந்துரைத்துள்ளோம் என்றார் அவர்.
இந்த தொகையின் மதிப்பு அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டாலும் அவர்களின் சுமையை இது ஓரளவு குறைக்கும் என நம்புகிறோம். நோன்பு பெருநாளுக்குப் பின்னர் அவர்களுக்கு மறுபடியும் உதவும் சாத்தியம் உள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
கடந்த 5ஆம் தேதி பெய்த அடைமழையில் காஜாங் வட்டாரத்திலுள்ள தாமான் சுங்கை ஜெலாக், தாமான் கந்தான் பெர்மாய், ஜாலான் செராஸ் பத்து 13, கம்போங் சுங்கை ராமால் பாரு, ஜாலான் சுங்கை கந்தான் ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கும் திட்டம் தொடரப்படும் எனக் கூறிய அவர், அத்தகைய உதவி தேவைப்படுவோர் குறித்த விபரங்களை தங்களிடம் வழங்கினால் அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றார்.