ஷா ஆலம், மே 10- நோன்பு பெருநாளின் போது சிறிய வீடுகளில் ஒரு சமயத்தில் ஐந்து விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
நெரிசல்மிகுந்த மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் நோய்த் தொற்று விரைவாக பரவுவதை ஆய்வுகள் காட்டுவதாக அந்த குழுவின் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமாருள்ஸமான் கூறினார்.
சிறிய வீடாக இருக்கும் பட்சத்தில் நோன்பு பெருநாள் சமயத்தில் ஐவருக்கும் மேல் வீட்டில் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடக்கூடிய விருந்துகள், நோன்பு துறப்பு நிகழ்வுகள் சந்திப்புகள் போன்ற நிகழ்வுகள் வாயிலாக நோய்த் தொற்று அதிகம் பரவியதை கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றன என்றார் அவர்.
மூடப்பட்ட அறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு நோய்க்கிருமிகள் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காவிட்டால் அக்கிருமிகள் நம்மை பீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.
‘எதை வேண்டுமானாலும் கேளுங்கள்- கோவிட்-19 ஆட்கொல்லியா?‘ எனும் தலைப்பில் நடைபெற்ற நேரடி நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
முகக்கவசம் அணிவது கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற செயல்களால் மக்கள் மிகவும் சலித்து போய்விட்டதை தாங்கள் உணர்ந்துள்ளதாக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவ நிபுணருமான அடீபா சொன்னார்.
எனினும், நாம் நோயாளியாக ஆகக்கூடாது என விரும்பினால் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். நோய்க் தொற்று பரவி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அதிலிருந்து தப்புவதற்கான வழி முறைகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றார் அவர்.