உலு லங்காட், மே 11– உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளதைப் போல் சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதை இலவச கோவிட்-19 பரிசோதனைகள் காட்டுகின்றன.
எனினும், நான்காவது நோய்த் தொற்று அலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
காஜாங், செமினி, பலாக்கோங், சுங்கை ராமால் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதை காட்டுகின்றன. எனினும், இதனால் நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது என்றும் அவர் சொன்னார்.
இலவச சோதனைகளின் போது நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பட்சத்தில் சமூகத்தில் இன்னும் அடையாளம் காணப்படாத நிறைய கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர் என்ற உணமை நமக்கு தெரியவருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் நடத்துகிறது.
தினசரி இரு தொகுதிகள் என்ற அடிப்படையில் நடத்தப்படும் இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை காஜாங், செமினி, சுங்கை ராமால், டுசுன் துவா, பலாக்கோங்,தெராத்தாய் ஆகிய தொகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.