கோலாலம்பூர், மே 17- மலேசியாவில் உள்ள பாலஸ்தீனர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான எல்லா வித நடவடிக்கைளையும் நாட்டிலுள்ள பாதுகாப்பு சார்ந்த அனைத்து அமைப்புகளும் எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
மலேசியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன உரிமை போராட்டத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய விடுத்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்புகள் குறித்தும் உள்துறை அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிக்கும் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் மறுவுறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலின் அச்சுறுத்தல் பட்டியலில் மலேசியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளதாக கூறும் காணொளி ஒன்று நேற்று முதல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.