ஷா ஆலம், மே 17- தங்கள் குடியிருப்பு பகுதியில் 40 விழுக்காட்டினருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ஷா ஆலம், செக்சன் 23 குடியிருப்பாளர் சங்கம் கூறியது.
தொழுகையில் கலந்து கொண்ட நபர் மூலம் இந்த நோய்த் தொற்று பரவியதாக வெளி வந்த தகவல் பொய்யானது என்றும் அச்சங்கம் கூறியது.
பொய்யான தகவலை வெளியிட்ட தரப்பினர் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அது தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை 7.5 விழுக்காட்டு வீடுகளில் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட வேளையில் 2.5 விழுக்காட்டு குடியிருப்பாளர்கள் நோய்த் தொற்றைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என அந்த அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செக்சன் 23 பகுதிக்குள் அம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நுழைவதற்கு தனியார் அம்புலன்ஸ் சேவை மையம் அப்பகுதியில் செயல்படுவதே அதற்கு காரணம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
அந்த குடியிருப்பு பகுதியில் 40 விழுக்காட்டு குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அங்கு நிலைமை கடுமையாக உள்ளதாகவும் வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக தகவல்கள் பகிரப்பட்டன.