ECONOMYMEDIA STATEMENTNATIONAL

60 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான அஸ்ட்ராஸேனேகா பதிவு இயக்கம் நாளை தொடங்கும்

ஷா ஆலம், மே 25- அறுபது வயதுக்கும் குறைவானவர்களை மையமாக கொண்ட இரண்டாம் கட்ட அஸ்ட்ராஸேனோ தடுப்பூசி திட்டத்திற்கான முன்பதிவு இயக்கம் நாளை நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர் பினாங்கு, கூச்சிங், மிரி ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வழக்கமான தடுப்பூசி மையங்களில் மூத்த குடிமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இன்று நாளையும் சிறப்பு முன்னுரிமையை வழங்கவிருக்கிறோம்.

அதே சமயம், அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டத்தை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக அதனை பொது மக்களுக்கு திறந்து விடவிருக்கிறோம் என்றார் அவர்.

கடந்த மே மாதம் 21ஆம் தேதி தருவிக்கப்பட்ட 12 லட்சத்து 61 ஆயிரத்து 600 டோஸ் மருந்தளவு தடுப்பூசிகள் இந்த இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளன. இம்மாத இறுதியில் மேலும் அதிகமான தடுப்பூசிகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :