ஷா ஆலம், மே 25– கடுமையாக்கப்பட்ட மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தின் எதிரொலியாக தொழிற்சாலைகள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் மீது ஷா ஆலம் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். காரணம் அங்குள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட விகிதாசார அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.
இது தவிர, எல்.ஆர்.டி., எம்.ஆர்.டி. மற்றும் பொது போக்குவரத்து பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையையும் கண்காணிக்கவிருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் டோல் சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்பை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.