டாமன்சாரா, மே 26- மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி முடிவுக்கு வந்தவுடன் வீடு வீடாகச் சென்று நோய்த் தொற்று சோதனை நடத்தப்படும்.
எனினும், கைவசம் உள்ள ஆள்பலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீடு வீடாகச் சென்று கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள 60 முதல் 70 விழுக்காடு பணியாளர்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் நேற்று மேலோட்டமாக கருத்து முன்வைக்கப்பட்டதே தவிர இது குறித்து விரிவான அளவில் விவாதிக்கப்படவில்லை. ஏற்கனவே வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தை நாம் அமல்படுத்தியுள்ளதால் அதனை மறுபடியும் அமல் செய்வதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.
நம்மிடம் போதுமான பணியாளர்கள் இருந்து நோய்த் தொற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் வரும் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை அமல் செய்தவற்குரிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டார் உத்தாமா தொகுதி நிலையில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.