ஷா ஆலம், மே 28– வேலையிட தொற்று மையங்கள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறன்றன. நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் 1,085 வேலையிட தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 129,322 வேலையிட நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி வரை 287 வேலையிட தொற்று மையத்தை உள்ளடக்கிய 17,087 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 16,785 சம்பவங்களை உள்ளடக்கிய 233 தொற்று மையங்கள் இன்னும் தீவிரத் தன்மையுடன் உள்ளன என்றார் அவர்.
சிலாங்கூரில் அதிகப்பட்சமாக 74 வேலையிட தொற்று மையங்களும் ஜோகூரில் 53 தொற்று மையங்களும் பினாங்கில் 32 தொற்று மையங்களும் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
தொழில் துறைகளில் 133 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் சேவைத் துறையில் 57 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 12ஆம் தேதி மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்ட போதிலும் நோய்த் தொற்று குறைந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்றும் அவர் சொன்னார்.