ஷா ஆலம், ஜூன் 3– சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 3,125ஆக உயர்வு கண்டது. நாட்டில் நோய்த் தொற்று கண்டது முதல் மாநிலத்தில் பதிவான மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும்.
நேற்று மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 2,728ஆக இருந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.
சிலாங்கூர் மாநிலத்தில் இதற்கு முன்னர் மிக அதிகமாக அதாவது 2,728 சம்பவங்கள் கடந்த மே மாதம் 27ஆம் தேதி பதிவானதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.
மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் காரணமாக நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவதாக அந்த பணிக்குழு தெரிவித்தது.
இதனிடையே, நாட்டில் இன்று 8,209 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 7,703ஆக இருந்தது.