ஷா ஆலம், ஜூன் 11- நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்காக தொற்று மையங்கள் உருவாகும் இடங்களுக்கு மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் விரிவாக்கம் செய்யப்படும்.
அதிகமான கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களை கையாளும் நிலையில் உள்ள மாநில சுகாகாரத் துறைக்கு உதவும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் நாங்கள் கண்காணித்து பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனையில் பங்கேற்கும்படி அறிவிப்பு செய்வோம் என்றார் அவர்.
இந்நடவடிக்கையின் மூலம் நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியைக் கொண்டிராதவர்களை கண்டு பிடிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.
மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் ஒளிபரப்பான ‘சிலாங்கூரில் நோய்த் எதிர்ப்பு சக்தியை விரைவுபடுத்துவதற்கான சிறந்த நடவடிக்கை‘ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் அவர் இனைத் தெரிவித்தார்.
அடுத்த கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று சம்பவங்களை பதிவு செய்த தொகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.