ஷா ஆலம், ஜூன் 15– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் முதல் தேதி அமல் செய்யப்பட்டது முதல் எஸ்.ஒ.பி. விதி மீறல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக சிலாங்கூர் மாநில போலீசார் 2,251 குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியது, முகக்கவசம் அணியாதது மற்றும் மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்யத் தவறியது ஆகிய குற்றங்கள் தொடர்பில் அதிக குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
கடந்த 13ஆம் தேதி வரையிலான 13 நாட்களில் இந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் மிக அதிகமாக அதாவது கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியது தொடர்பில் 541 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.
முகக் கவசம் அணியாதது தொடர்பில் 523 பேருக்கும் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்யத் தவறியது தொடர்பில் 238 பேருக்கும் குற்றப்பதிவு வழங்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
பொதுவாக, சிலாங்கூர் மக்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது தாங்கள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.