கோலாலம்பூர், ஜூன் 16- 2020 ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சியின் தேசிய மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும். சுமார் இரண்டாயிரம் பேராளர்கள் வீட்டிலிருந்தவாறு ஸூம் செயலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்பர் என்று ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும் மாநாட்டின் இயக்குநருமான நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.
சங்கங்களின் பதிவகம் (ஆர்.ஒ.எஸ்.) இம்மாதம் 9ஆம் தேதி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இதனிடையே கடந்த மாதம் 21ஆம் தேதியிட்ட கடிதத்தில் மாநாட்டை நடத்துவதற்கு கெஅடிலான் கட்சிக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக ஆர்.ஒ.எஸ் கூறியிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் ஜனநாயக மீட்சி தொடர்பான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிக் நஸ்மி தெரிவித்தார்.
கடந்த 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாடுகள் முடிந்து தேசிய மாநாடு நடைபெறவிருந்த வேளையில் அம்மாநாட்டை நிறுத்தக் கோரி தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் ஆர்.ஒ.எஸ் ஆகியவை உத்தரவிட்டன.