ஷா ஆலம், ஜூன் 17– பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அறிவித்த நான்கு கட்டங்கள் அடங்கிய தேசிய மீட்சித் திட்டத்தை ‘தோல்வியை ஒப்புக் கொள்ளும் திட்டம்‘ என பக்கத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வர்ணித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிறுவனங்களை மீட்சியுறச் செய்வதற்கான முழுமையான வியூகம் எதனையும் இந்த திட்டம் கொண்டிருக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மன்றம் கூறியது.
‘கோவிட்-19 நோய்த் தொற்றிடம் தோல்வி கண்ட திட்டம்‘ என இதனை வர்ணிக்கலாம் என அக்கூட்டணியின் மூன்று தலைவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று கூறியது.
பிரதமர் அறிவித்த அந்த நான்கு கட்டத் திட்டம் அறிவியல் மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிடப்பட்டுள்ள அந்த தரவுகள் மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லை. ஏற்கனவே நாம் கண்டதைப் போல் எளிதில் திசை திருப்பக் கூடிய சாத்தியங்களை அது கொண்டுள்ளது என்று அந்த மன்றம் கூறியது.
கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.
இலக்கின்றி தவிக்கும் தங்கள் நிர்வாகத்தின் மீதான மக்களின் பார்வையை திசை திரும்பும் நோக்கில் அவசர கோலத்தில் இந்த மீட்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.