கோலாலம்பூர், ஜூன் 24- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சில்லறை வாணிகம் உள்பட அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்களும் முதலாளிகளும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழுள்ள வேலை வாய்ப்பு காப்புறுதி முறையின் (சிப்) கீழ் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை தேடும் அலவன்ஸ், தொடக்க மறு வேலைக்கான அலவன்ஸ், வருமான குறைவுக்கான அலவன்ஸ், பயிற்சி அலவன்ஸ் மற்றும் வேலை தேடுதல் அலவன்ஸ் ஆகிய அனுகூலங்களை சிப் உதவித் திட்டத்தின் கீழ் பெற முடியும் என்று மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.
இது தவிர, பதிவு பெற்ற பயிற்றுநர்களுக்கு பயிற்சி கட்டணமாக அதிகப் பட்சம் 4,000 வெள்ளி வரை வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
வேலை இழந்தவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் நிதியுதவி வழங்குவதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதையும் நோக்கமாக கொண்ட சமூக பாதுகாப்பு ஒருங்கமைப்பாக “சிப்“ விளங்குகிறது.
காப்புறுதி திட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக ஆலோசனைகளும் உதவிகளும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது