ஸ்ரீ கெம்பாங்கான், ஜூன் 25– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஸ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதி இன்று கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்தியது.
இந்த இலவச பரிசோதனை இயக்கம் செர்டாங் ஜெயா, எம்.பி.எஸ்.ஜே அரங்கில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நடத்தப்பட்டது.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை சமூகத்தில் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த சோதனை இயக்கம் நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று இவ்வட்டாரத்தில் தொடர்ந்து இருந்து வருவதாக கூறிய அவர், செர்டாங் ஜெயா வட்டாரத்தில் மட்டும் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி இதுவரை எட்டு மரணச் சம்பவங்கள் நேர்ந்துள்ளன என்றார்.
இந்த பரிசோதனை இயக்கத்தின் போது நோய்த் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் வீடுளில் தனிமைப்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு நோய்த் தொற்றின் பாதிப்பை கண்டறியும் சுய பரிசோதனை கருவி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.