ஷா ஆலம், ஜூன் 26- பாலஸ்தீன மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்ட சிலாங்கூர் பரிவு மனிதாபிமான நிதிக்கு 370,000 வெள்ளி திரண்டது. இந்த நிதி பாலஸ்தீன மக்களுக்காக அம்புலன்ஸ் வாகனம் வாங்குவதற்கும் உணவுத் தேவைக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த நிதியை மாநில கருவூலம் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதியை கையாளும் குளோபல் பீஸ் மிஷன் அமைப்பிடம் வழங்கும் என்று இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பல நன்கொடையாளர்களால் நிதி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நிதி திரட்டும் திட்டம் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பாலஸ்தீன மக்களுக்கான இந்த நிதியுதவித் திட்டத்திற்கான இலக்கில் சுமார் ஐந்து லட்சம் வெள்ளியை தாங்கள் நெருங்கி விட்ட நிலையில் அதில் 370,000 வெள்ளி வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டு விட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இஸ்ரேலிய படையின் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு அம்புலன்ஸ் வாகனம், உணவுப் பொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக மாநில அரசு நிதி திரட்டும் இயக்கத்தை கடந்த மே மாதம் 10ஆம் தேதி தொடக்கியது.