ஷா ஆலம், ஜூன் 29- கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியாவிலுள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த குடியிருப்பில் நாளை தொடங்கி அமல் செய்யப்படவிருக்கும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் குறித்து அப்பகுதி மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
எல்.ஆர்.டி. 3 கட்டுமானத் திட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பின் ஒரு புளோக் பகுதியை மட்டுமே இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை உள்ளடக்கியுள்ளதாக சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
அப்பகுதியில் இதுவரை 156 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்நிய குடியிருப்பை மட்டும் உள்ளடக்கிய இந்த ஆணையின் அமலாக்கம் குறித்து சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார் அவர்.
அந்த கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நோய்த் தொற்று சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு ஊடுருவவில்லை எனக் கூறிய அவர், கம்போங் ஜோஹான் செத்தியா, கம்போங் ஸ்ரீ நாடி, ஆகிய பகுதிகளில் நோய்த் தொற்று குறைந்து வருகிறது என்றார்.