ஷா ஆலம், ஜூன் 29- குப்பை அகற்றும் வாகனங்கள் இடையூறுன்றி செல்வதற்கு ஏதுவாக தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்தி வைக்கும்படி வீடமைப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பொறுப்பற்ற சில தரப்பினரின் செயல்களால் குப்பை அகற்றும் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க இயலாத சூழல் ஏற்படுவதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சுமார் எண்பது விழுக்காட்டினர் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வாகனங்களை முறையாக நிறுத்தாத காரணத்தால் குப்பை அகற்றும் லோரி போன்ற பெரிய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆகவே, அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் உள்பட அனைவரும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்களை வாகனங்களை முறையாக நிறுத்தி வைக்கமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
பாங்கியிலுள்ள இவோ மாலில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி இயக்கத்திற்கு தமது நிறுவனப் பணியாளர்களை அழைத்து வந்த போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பொதுமக்கள் கண்ட இடங்களில் வீசாமல் அவற்றை முறையாக குப்பைத் தொட்டிகளில் போட வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.
குப்பை அகற்றும் பணியாளர்களுக்கு அந்த முகக் கவசங்களிலிருந்து நோய்த் தொற்று பரவும் அபாயத்தை தடுப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் கூறினார்.