ஷா ஆலம், ஜூன் 30- கோல லங்காட் செலாத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தற்காலிக பயிரீட்டுக்கான அனுமதியை வழங்குவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது.
சட்ட விரோத விவசாயிகளின் அத்துமீறில் நடவடிக்கைகள் மற்றும் ஆண்டு தோறும் ஏற்படும் காட்டுத் தீ போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
எனினும், அங்குள்ள 8,000 ஹெக்டர் காட்டுப்பகுதியில் 1,700 ஹெக்டர் பகுதி மட்டுமே விவசாய நோக்கத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
உடனடியாக பலன் தரக்கூடிய குறுகிய கால பயிர்களை நடவு செய்வதில் ஆர்வம் கொண்ட தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 21 ஆண்டுகால தற்காலிக லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தெலுக் பங்ளிமா காராங், ஜாலான் பண்டார் லாமாவில் தீச்சம்பவம் நிகழந்த பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
தற்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் அந்நிய நாட்டினரைக் கொண்டு காடுகளை சுத்தப்படுத்தி கிழங்கு உள்ளிட்ட உணவு வகைகளை பயிரிட்டு வருவதாக அவர் சொன்னார்.