ஷா ஆலம், ஜூன் 30- ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அங்கு மிகப்பெரிய அளவில் கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மரணச் சம்பவங்கள் உள்பட நோய்த் தொற்றினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டவர்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக இச்சோதனை இயக்கம் நடத்தப்படுவது அவசியம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார்.
நோய்த் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எனது அலுவலகம் தினமும் தகவல்களைப் பெற்று வருகிறது. சுகாதார அமைச்சு ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் விபரீதமாகிவிடும என்ற அச்சம் ஏற்படுகிறது என்றார் அவர்.
இந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கிய இந்த ஓராண்டு காலத்தில ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியைச் சேர்ந்த சுமார் 40 பேர் செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் நோய்ப் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து அத்தொகுதி தனது சொந்த முயற்சியில் கடந்த 25ஆம் தேதி பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காக கொண்டு கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்தியது.