கோலாலம்பூர், ஜூன் 30- நடப்பிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஆகஸ்டு மாதம் முதல் தேதிக்கு முன்னதாக கூட்டுவதற்கு மேலவை உறுப்பினர் செனட்டர் டான்ஸ்ரீ டாக்டர் ராய்ஸ் யாத்திமும மக்களவை சபாநாயகர் டத்தோ அஸார் அஸிசான் ஹருணும் பிரதமரிடம் பரிந்துரை செய்வர்.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவர்களுடன் அவ்விருவரும் நடத்திய சந்திப்பை தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிடின் யாசினிடம் இந்த பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவுக்கேற்ப நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டையும் முழு ஈடுபாட்டையும் மாமன்னரிடம் மேலவைத் தலைவரும் மக்களவைத் தலைவரும் வெளிப்படுத்தியுள்ளனர் என மலேசிய நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
நாடாளுமன்றம் வரும் ஆகஸ்டு முதல் தேதிக்கு முன்னதாக கூட்டப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மாமன்னர் அந்த சந்திப்பின் போது வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்த சந்திப்பின் போது மேலவை மற்றும் மக்களவை துணை சபாநாயகர்களும் உடனிருந்தனர்.