ஷா ஆலம், ஜூலை 3– வேலைச் சுமைக்கு மத்தியிலும் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிகளை வழங்கும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் மற்றும் அவரின் குழுவினருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ டத்தோ அர்ஜூனைடி முகமதுவும் மாநில போலீஸ் துறையைச் சேர்ந்த உறுப்பினர்களும் எடுத்துள்ள முயற்சி மனிதாபிமானத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் சொன்னார்.
நோய் தொற்று ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இக்கட்டான சூழலில் வாழ்க்கையை நடத்தி வருவோருக்கு இத்தகைய மனிதாபிமானமிக்க மனிதர்களின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. டத்தோ அர்ஜூனைடி அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் பாராட்டுக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று பேசிய டத்தோ அர்ஜூனைடி, பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குட்பட்ட பகுதிகளில் இருப்போருக்கு தமது தரப்பு உதவி வருவதாக கூறியிருந்தார்.
சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டுகிறோம். பின்னர் அவர்களை ஸக்கத் வாரியம் போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உதவிகள் தொடரப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்றார் அவர்.