ஷா ஆலம், ஜூலை 3- இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மாநிலம் முழுவதும் 8,386 சிறு வணிகர்களுக்கு சிலாங்கூர் அரசு தற்காலிக வர்த்தகை லைசென்ஸ் வழங்கியுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து பொது மக்கள் மீள்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்காலிக அடிப்படையில் லைசென்ஸ் வழங்கப்பட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட வணிகர்கள் இவ்வாண்டு இறுதி வரை தங்கள் வியாபார நடவடிக்கையை இடையூறின்றி மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2,025 பேருக்கும் கடந்தாண்டில் 6,361 பேருக்கும் இத்தகைய தற்காலிக வர்த்தக அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தக லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சிறிய அளவில் வியாபாரம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை விரைந்து செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
காஜாங் நகராண்மைக்கழகம் (2,220), பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம (1,642), சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (1,172) ஆகிய ஊராட்சி மன்ற பகுதிகளில் அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.