கோலாலம்பூர், ஜூலை 4– பள்ளிகள் மூடப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் வியாபார இடங்களுக்கு இம்மாதம் தொடங்கி ஆறு மாதங்களுக்கு கல்வியமைச்சு வாடகை விலக்களிப்பு வழங்கியுள்ளது.
தேசிய மீட்சி நிலைக்கான முதல் கட்ட அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளிகளில் செயல்படும் புத்தகக் கடைகள், கூட்டுறவுக் கடைகள், சலவை நிலையங்கள் மற்றும் சுயசலவை நிலையங்களுக்கு இந்த வாடகை விலக்களிப்பு வழங்கப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மேலும், பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் இதர வியாபார மையங்களுக்கான வர்த்தக ஒப்பந்தம் காலாவதியாகும் போது அதனை மேலும் ஓராண்டிற்கு இயல்பாக நீட்டிப்பதற்கும் கல்வியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அது தெரிவித்தது.
இதுதவிர, சமைத்த உணவுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒப்பந்தமும் நீடிக்கப்படும். நடப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பள்ளியின் துப்புறவுப் பணிகளுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அமைச்சு முழு கட்டணத்தை வழங்குவதால் குத்தகையாளர்கள் தங்கள் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக புகார் எழுவதற்கு காரணமே இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது.