ஷா ஆலம், ஜூலை 5– தொழிற்சாலை ஊழியர்களை இலக்காக கொண்டு சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் கடந்த ஓராண்டாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக தொழிலாளர்கள் மத்தியில் நோய்த் தொற்றுக்கான அபாயம் குறையும் பட்சத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் மீட்சி காண்பதற்கான வாய்ப்பு உள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
தொழிலாளர்களின் ஒரு பகுதியினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில் தொழில்துறைகள் முழு ஆற்றலுடன் செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டமான செல்வேஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய மலாய் வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் அப்துல் ரஹிம் சஹாட் கூறினார்.
தங்கள் பொருள்கள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் பல தொழிற்சாலைகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும், பொது முடக்கம் காரணமாக முழு அளவில் செயல்பட முடியாத நிலையில் அவை உள்ளன என்றார் அவர்.