ஷா ஆலம், ஜூலை 6– வணிகர்களை நேரடி விற்பனை முறையிலிருந்து இலக்கவியல் விற்பனை முறைக்கு மாற்றும் திட்டத்திற்காக சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கான இலக்கவியல் இணை மானியத் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் அரசு 12 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த 492 பேரில் 280 பேருக்கு மானிய சிறப்பு மதிப்பீட்டுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக முதலீடு, சிறு மற்றும் நடுத்த தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தங்களுக்கான நிதியைப் பெற்றனர் இவ்வாண்டில் சுமார் 1,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இத்திட்டத்தில் பங்கேற்கச் செய்யும் எங்கள் இலக்குக்கு ஏற்ப இத்திட்டம் சீராக நடைபெறுகிறது என்றர் அவர்.
இத்திட்டத்திற்கான முதல் கட்ட பதிவு நடவடிக்கையைத் தவறவிட்டவர்கள் வரும் ஆகஸ்டு மாதம் திறக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் சொன்னர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இலக்கவியல் உருமாற்றத்திற்கு தயார் படுத்துவதை இலக்காக கொண்ட இத்திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்காக மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1,000 வணிகர்களுக்கு வெ.1,000 முதல் 5,000 வரை நிதியதவி வழங்கப்படும்.