ஷா ஆலம், ஜூலை 6– சம்பள உதவித் திட்டத்தின் (பி.எஸ்.யு.) கீழ் அரசாங்கம் இதுவரை 1,567 கோடி வெள்ளியை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி 27 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களும் 333,533 முதலாளிகளும் பயனடைந்துள்ளனர்.
பி.எஸ்.யு.1 முதல் பி.எஸ்.யு. 3 வரையிலான அனைத்து திட்டங்களின் வாயிலாக எல்லா துறைகளும் பயன்பெற்றுள்ளதாக சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமது அஸ்மான் அஜிஸ் முகமது கூறினார்.
பி.எஸ்.யு. 4.0 திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 1,582 கோடி வெள்ளியாக உயர்வு காணும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பி.எஸ்.யு. 4.0 திட்டத்திற்கு ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி அக்டோபர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இதற்கான நிதி பகிர்ந்தளிப்பு இவ்வாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மேற்கொள்ளப்படும்.
சம்பள வேறுபாடின்றி அனைத்து ஊழியர்களுக்கும் மாதம் 600 வெள்ளி உதவித் தொகை கோரி முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்.