கோலாலம்பூர், ஜூலை 7– டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் பதவியையும் அவர் தொடர்ந்து வகித்து வருவார்.
டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் வெளியுறவு துறைக்கான மூத்த அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு இஸ்மாயில் சப்ரி வகித்து வந்த நோய்த் தொற்று பாதுகாப்பு பிரிவுக்கும் தலைமையேற்பார்.
பிரதமர் துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
தேசிய மீட்சித் திட்டத்தின் அமலாக்கத்திலும் ஹிஷாமுடின் தனக்கு துணையாகச் செயல்பட பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு நியமனங்களும் மாட்சிமை தங்கிய மாமன்னரின் மேலான கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு உடனடியாகவும் அமலுக்கு வருவதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.