ஷா ஆலம், ஜூலை 10- கிராப் இணைய வாடகைக் கார் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வோருக்கு மாநில அரசு வழங்கும் 20 வெள்ளி கட்டணக் கழிவை பெறுவதற்கு இதுவரை சுமார் 3,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சலுகைத் திட்டத்திற்கு 20 முதல் 30 வயது வரையிலானவர்களே அதிகம் விண்ணப்பம் செய்துள்ளதாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வர்த்தக சமூக கடப்பாட்டுப் பிரவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
இந்த திட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது முதல் அதிக எண்ணிக்கையிலானோர் இந்த கட்டணக் கழிவுக்கு விண்ணப்பம் செய்வதாக அவர் சொன்னார்.
அந்நிய நாட்டினர், புலம் பெயர்ந்தவர்கள், அனைத்துலக மாணவர்கள், சிலாங்கூருக்கு வெளியே வசிப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக கூறிய அவர், எனினும், நிபந்தனைகளுக்கு முரணாக உள்ளதால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஐம்பதாயிரம் பேரை தாண்டும் பட்சத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.