ஷா ஆலம், ஜூலை 10- செலாயாங் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்படும் தகவலை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா நிராகரித்துள்ளது.
அதே சமயம், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெறுவதற்காக அம்மருத்துவமனை நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதையும் அவ்விலாகா வன்மையாக மறுத்துள்ளது.
தற்போதைக்கு செலாயாங் மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகடிமான் கூறினார்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கை எதனையும் செலாயாங் மருத்துவமனைப் பணியாளர்கள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், மருத்துவமனையின் சார்பாக நிதி திரட்டும்படி அதன் பணியாளர்களை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகமும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பிறருடன் பரிமாறுவதை தவிர்க்கும்படி மாநில சுகாதாரத் துறை பொது மக்களைக் கேட்டுக் கொண்டது. விபரங்கள் பெற விரும்புவோர் செலாயாங் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளும்படியும் அது கேட்டுக் கொண்டது.