ஷா ஆலம், ஜூலை 12– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்) சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி வரை 17 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் அக்காலக்கட்டத்தில் 42.1 லட்சம் பேர் அதாவது மாநிலத்திலுள்ள தடுப்பூசி பெறத் தகுதியுள்ள பெரியவர்களில் 88.35 விழுக்காட்டினர் இத்திட்டத்திற்கு பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் அரசின் சொந்த தடுப்பூசித் திட்டமத்தைப் (செல்வேக்ஸ்) பொறுத்தவரை கடந்த சனிக்கிழமை வரையிலான காலக்கட்டத்தில் 44,233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 11,393 பேரும் (25.8%) தொழில் துறையினருக்கான திட்டத்தின் கீழ் 32,840 பேரும்(74.2%) தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
‘பிக்‘ திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 43,000 ஆக இருந்த தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை இம்மாதம் 89,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தற்போது தினசரி 20,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக உயரும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.