ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 நோயாளிகளின் உடல்களை வைக்க கிள்ளான் மருத்துவமனைக்கு மேலும் இரு கொள்கலன்கள்

ஷா ஆலம், ஜூலை 15- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் உடல்களை வைக்க மேலும் இரு கொள்கலன்களை கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை சுகாதார அமைச்சிடமிருந்து பெறும்.

சிலாங்கூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு இந்த கொள்கலன்கள் தருவிக்கப்படுகின்றன.

சுகாதார அமைச்சு வழங்கும் இரு கொள்கலன்களுடன் சேர்த்து தற்போது மருத்துவமனை வசம் இருக்கும் கொள்கலன்களின் எண்ணிக்கை நான்காக உயரும் என்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.

மருத்துவமனையின் வசம் ஏற்கனவே ஒரு கொள்கலன் உள்ள வேளையில் மஇகா ஒரு கொள்கலனை வழங்கியுள்ளது. மேலும் இரு கொள்கலன்கள் கிடைக்கும் பட்சத்தில் 120 சடலங்களை வைப்பதற்குரிய இடம் கிடைக்கும் என்றார் அவர்.

அந்த நான்கு கொள்கலன்களுடன் மருத்துவனையின் தடயவில் பிரிவு சவடக்கிடங்கில் உள்ள வசதிகளுடன் சேர்த்தால் ஒரே சமயத்தில் 150 உடல்கள் வரை வைக்க இயலும் என்று அவர் மேலும் சொன்னார்.

அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தடயவில் பிரிவில் கோவிட்-19 நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை முறையாக கையாள முடியாத நிலை ஏற்பட்டது குறித்து கருத்துரைத்த அவர், மலேசிய ஆயுதப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்னைக்கு கட்டங் கட்டமாக தீர்வு காணப்படும் என்றார்.

கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு சிகிசிசையளிக்கும் சூழலில் இம்மருத்துவமனை உள்ளதால் விபத்தில் சிக்க்கியவர்கள் மற்றும் இருதய நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்காக வருவதாக அவர் மேலும் சொன்னார்.

இத்தகைய நோயாளிகளில் ஒரு பகுதியினரை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேளையில் மற்றவர்களை கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் உள்ள கே.பி.ஜே. மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :