பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17– சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த 1,800 பேர் இன்று தடுப்பூசியைப் பெற்றனர்.
கடந்த வாரம் முழுவதும் தொகுதி சேவை மையத்தில் பதிந்து கொண்டவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட தடுப்பூசித் திட்டம் இதுவாகும் என்று தொகுதி உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.
தேசிய கோவிட்-19 திட்டத்தின் கீழ் பெரும்பாலான முதியோர் தடுப்பூசியைப் பெற்றுவிட்டதால் இந்த இயக்கத்தில் பெரும்பாலும் இளைஞர்களே பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசி இயக்கத்தில் நாங்கள் எந்த தரப்பினரையும் இலக்காக கொள்ளவில்லை. மாறாக, தடுப்பூசி பெற விரும்பும் புக்கிட் காசிங் தொகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
மாநில அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் வழங்கிய 2,500 தடுப்பூசியை முழுமையாக முடிக்கும் நோக்கில் இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கத்தை நடத்தவிருக்கிறோம். இதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் நோய்த் தடுப்புச் சக்தியைப் பெற முடியும் என்றார் அவர்.
பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை இலக்காக கொண்டு சிலாங்கூர் மாநில அரசு இரு செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.