ஷா ஆலம், ஜூலை 17- சிலாங்கூரில் உள்ள 34 துணை மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றுடன் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து வாகன பழுதுபார்ப்பு பட்டறைகள், உலோகப் பொருள் விற்பனை கடைகள், சுய சலவை நிலையங்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான எஸ்.ஓ.பி. விதிமுறைகளின்படி அந்த வியாபார மையங்கள் அனைத்தும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
குழந்தைகளுக்கான பொருள் விற்பனை மையங்கள், மூக்கு கண்ணாடி கடைகள், மருந்தகங்கள், பாசார் ராயா, கால்நடை உணவு கடைகள் போன்றவை செயல்படுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை தொடர்பான கடைகள் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இனி செயல்பட முடியும்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்பட்டதை தொடர்ந்து புதிதாக அமல்படுத்தப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகள் வருமாறு-
– ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பத்து கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி வரை காரில் பயணிக்கலாம்.
– அவசர வேளை, தடுப்பூசி செலுத்துவது, சிகிச்சை பெறுவது போன்ற காரணங்களுக்காக ஒரு காரில் மூவர் பயணிக்கலாம்.
– அரசு பணியாளர்களில் 20 விழுக்காட்டினரும் தனியார் துறை பணியாளர்களில் 60 விழுக்காட்டினரும் அலுவலங்களில் வேலை செய்யலாம்.
– விளையாட்டு, பொழுதுபோக்கு நடவடிக்கைகளை காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மேற்கொள்ள அனுமதி.
-பெட்ரோல் நிலையங்கள் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.